×

பணம் கொட்டோ கொட்டுனு கொட்டனுமா? - சாதித்தவர்கள் சொல்லும் 11 சிம்பிள் ட்ரிக்ஸ்!

 

ஓவர் நைட்டில் பெரும் பணக்காரனாக ஆகிவிட வேண்டும் என மனிதராகிய எல்லோருக்குள்ளும் ஒரு பேராசை இருக்கிறது. 1990களில் இருந்து இந்த மனநிலை அதிகரித்து வண்ணமே இருக்கிறது. மக்களில் பலர் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளைத் தேடுகிறார்கள். சிலர் ஓய்வுபெற்ற பின் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்கான முதலீடுகளைச் செய்கிறார்கள். இன்னும் சிலர் புதிதாக ஒரு தொழில் தொடங்கி லாபம் ஈட்ட எண்ணுகிறார்கள். இதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு பிரமாண்டமான வீடு, பிரபலமான கார் ஆகியவற்றை வாங்கவும், விடுமுறையில் சுற்றுலா செல்லவும் திட்டமிடுகிறார்கள். 

இதுதான் பணக்காரர்களுக்கான தகுதியாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் பணக்காரர்கள் யார்? எது செல்வம்? அதற்கு என்ன தேவை என பலருக்கும் தெரியாது. பணக்காரனாக இருப்பது ஒரு மனநிலை. நீங்கள் ஏழையாக இருந்துகொண்டே பணக்காரனாக இருக்கலாம். அதேபோல பணக்காரனாக இருந்துகொண்டு ஏழையாகவும் இருக்கலாம். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் பணக்காரர் என்று நினைத்தால் பணக்காரர். ஏழை என்று நினைத்தால் ஏழை. நிறைய பணம் வைத்திருந்தாலோ பெரிய கோட்டையை கட்டி ஆண்டாலோ பணக்காரர்கள் என நிறைய பேர் எண்ணுகிறார்கள். 

உண்மையில் நாம் விரும்பியதை சுதந்திரமாகச் செய்து, வாழ்வில் மகிழ்ச்சியைப் பெற்றால் அனைவரும் பணக்காரர்கள் தான். உங்களிடம் விரும்பியதை வாங்க கூடிய பணம் இருந்தாலும் சிம்பிளாக இருக்க வேண்டும் அவ்வளவே. இந்த மனநிலையை வளர்த்துக்கொண்டால் நீங்களும் பணக்காரர் தான். உங்கள் மனநிலையைப் பொறுத்தது. ஆனால் பணக்காரர்களாக வேண்டுமென்றால் சில வழிகள் உள்ளன. அதனை இதில் காண்போம். நீங்கள் பணக்காரர்களாக விரும்பினால் நிச்சயம் தைரியமான சில முடிவுகளை எடுத்தாக வேண்டும். உங்கள் லட்சியம் பெரிது என்பதால் வாழ்க்கையிலும் மிகப் பெரிய விஷயத்தையும் செய்தாக வேண்டும்.

1. திறமையே முதலீடு

பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் கோடீஸ்வரர்களாக இருப்பார்கள். அதனை அவர்கள் எப்படி சம்பாதித்தார்கள்? திறமையைக் கொண்டு தானே. யாராலும் செய்ய முடியாத விஷயத்தை மிகச் சிறப்பாக செய்யும் பொருட்டு திறமையை வளர்த்து கொள்ளுங்கள். அதில் வேலை செய்யுங்கள், தயார்படுத்திக் கொள்ளுங்கள், கற்றுக் கொள்ளுங்கள், பயிற்சி செய்யுங்கள், மதிப்பீடு செய்து முழுமையாகச் செம்மைப்படுத்துங்கள். உங்களிடம் நல்ல திறமைகள் இருந்தால் அதன் மூலம் சம்பாதிக்கலாம். சமூகத்தில் சாதித்தவர்கள் நேரம், ஆற்றலை முதலீடு செய்து தான் பணக்காரர்களாகியிருக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுங்கள். 

2. சிறு சேமிப்புக்குப் பின் முதலீடு

உடனடியாக நம்மால் கோடீஸ்வரராகி விட முடியாது. ஆகவே குறுகிய காலத்தில் 1 லட்சம் ரூபாய் சேமிப்பதை இலக்காக கொண்டு செயல்படுங்கள். சிறு சிறு சேமிப்புகள் தான் பின்னாளில் சக்திவாய்ந்த ஆயுதமாக மாறும். அதிலிரிந்து சிறு சிறு தொகைகளை முதலீடு செய்யுங்கள். முடியும். அது தான் உங்களின் நிதி அடித்தளமாக இருக்கும். பின்னாட்களில் கைகொடுக்கும்.

3. புதிய கண்டுபிடிப்பு மற்றும் மக்கள் சேவை

நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பதற்குப் பதில் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என நினைக்கு தொடங்க வேண்டும். மக்கள் ஆதரவு இல்லாமல் எந்தவொரு வியாபாரமும் வென்றதாக சரித்திரமில்லை. மக்களின் தேவையறிந்து உங்களின் சேவை இருக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் உங்களின் புதிய தயாரிப்பு பிரபலமாகும். நீங்கள் சேவை செய்யும்போது மக்களோடு எளிதில் இணைத்துக் கொள்ள முடியும். உங்கள் மீது நம்பிக்கை பிறக்கும். அவர்களின் கருத்துகளைக் கேட்டு மேம்படுத்திக் கொள்ளுங்கள். மக்கள் சேவையும் ஒருவித முதலீடு தான்.

4. ஸ்டார்ட்-அப் பங்குகளில் முதலீடு

இன்று உலகளவில் பிரபலமான ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் ஆரம்பத்தில் சிறிய நிறுவனங்களாக (ஸ்டார்ட்-அப்) தொடங்கப்பட்டவை தான். அதில் ஆரம்ப காலத்தில் பணிபுரிந்து ஊழியர்கள் தான் இன்றைய கோடீஸ்வரர்கள். ஆகவே ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் பணிபுரிந்து அதன் சந்தை பங்குகளில் முதலீடு செய்யுங்கள். பிற்காலத்தில் நிச்சயம் அவை வெற்றிபெறும். அவ்வாறு வெற்றிபெறும்போது பெரு நிறுவனங்கள் அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கும். அப்படி வாங்கினால் அதில் உங்களுக்கும் பங்கு இருந்தால் பெரும் தொகை உங்களுக்கு கிடைக்கும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!

5. சொத்துகளை உருவாக்குதல்

கொரோனா சமயத்தில் ரியல் எஸ்டேட் துறை படுத்துக்கொண்டாலும் நிச்சயம் எழுந்திரிக்கும். ஆகவே சொத்துகளை வாங்குங்கள். 2,50,000 ரூபாய்க்கு ஒரு சொத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் 2 லட்சம் ரூபாயை கடன் வாங்குகிறீர்கள் என்றால் 50 ஆயிரம் ரூபாயை உங்கள் பணத்தை முதலீடு செய்யுங்கள். பின்னர் நல்ல விலைக்கு வந்தவுடன் விற்றுவிடுங்கள். அந்த சொத்து 4 லட்சத்திற்கு விலை போகிறதென்றால் கடன் பாக்கி 2 லட்சம் போக 2 லட்சம் உங்களுக்கு லாபம். நீங்கள் போட்ட 50 ஆயிரம் 4 மடங்காகி 2 லட்சமாக உங்களுக்கு கிடைக்கும். இதில் ஆபத்து இருக்கலாம். ஆனால் நீண்டகால திட்டத்தில் ஆரோக்கியமான முதலீடு நிலம் வாங்குவதே.

6. பங்குச்சந்தையில் நிலையான முதலீடு

பங்குச்சந்தையின் அன்றாட நிகழ்வுகளைக் கண்காணித்து வருங்காலத்தில் எந்தப் பங்கு எப்படி செல்லும் என்பதைக் கணித்து அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும். இது நீண்டகால திட்டமாக இருக்க வேண்டும். போட்ட உடன் எடுக்கக் கூடிய intra day டிரேடிங் அல்ல. அந்த குறிப்பிட்ட பங்கில் குறிப்பிட்ட முதலீட்டை செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். பின்னாட்களில் அவை விலை உயரும் போது லாபம் பார்க்கலாம். ஆபத்து அதிகம்; புத்திசாலித்தனமாக செயல்பட்டால் பெத்த லாபம்.

7. சொந்த நிறுவனத்தை விற்பனை செய்தல்

மக்களின் எல்லா தேவையையும் சந்தை பூர்த்தி செய்யாது. எனவே எதாவது ஒரு குறிப்பிட்ட தேவையைக் கண்டறிந்து மக்களுக்கு அதைக் கொடுக்கும் வகையில் புதிய தொழிலை தொடங்க வேண்டும். இதில் கடின உழைப்பு முக்கியம். உழைத்தால் வெற்றி நிச்சயம். நல்ல லாபம் கிடைத்தவுடன் அதனை இன்னொருவருக்கு கைமாற்றி விட வேண்டும். பெரும் பணக்காரர்களாக இருக்கும் பெரும்பாலோனோரின் அணுகுமுறை இதுதான்.

8. பிடித்த வேலையில் முதலீடு; அனுபவமே லாபம்

வெறுப்புடன் ஒரு வேலையைச் செய்து யாரும் வெற்றிபெற்றதில்லை. ஆகவே நீங்கள் செய்யும் வேலையை நேசியுங்கள். பொறுப்புடன் செய்யுங்கள். அதற்கான பிரதிபலன் எப்போதுமே நீங்கள் நினைத்தை விட அதிகமாகவே இருக்கும். அதிகப்படியான அனுபவங்கள் கிடைக்கும்போது நிறுவனங்களில் உயர் பொறுப்புகளை அலங்கரிக்கலாம். மற்ற பெரிய நிறுவனங்களில் உங்களால் மகிழ்ச்சியாக எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல் பணிபுரிய முடியும். முக்கியமாக உங்களின் சம்பளம் மும்மடங்கு கூட உயரலாம்.

9. இது மட்டும் கூடவே கூடாது   

சிலர் பணக்காரர்களாக வேண்டும் என்பார்கள். அதற்கான சரியான வழியிலும் பயணிப்பார்கள். ஆனால் அவர்களின் லட்சியம் நிறைவேறாது. காரணம் அர்த்தமற்ற செலவு. அர்த்தத்துடன் பணம் சம்பாரித்து அர்த்தமற்ற செலவு செய்தால் எப்படி லட்சியம் நிறைவேறும்? ஆகவே உங்கள் செலவுகளைக் குறைத்து லாபத்தை பெருக்குங்கள். வாழ்க்கையில் சிக்கனமான அணுகுமுறையைக் கடைப்பிடியுங்கள். மின் விளக்குகளை அணைக்கும்போது ஏற்படும் சிறிய சிக்கனம் கூட பெரும் லாபம் தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

10. வங்கி சேமிப்பு

வங்கி சேமிப்பு மிகப்பெரிய நம்பிக்கையை வரவழைக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் நீங்கள் 1 சதவீதம் என்ற அளவில் பணத்தைச் சேமித்து வரவேண்டும். ஆரம்பத்தில் சிறிய முதலீடாக தெரியலாம். காலங்கள் செல்ல செல்ல மிகப்பெரும் மாற்றத்தை நீங்கள் உணர முடியும். ஓய்வுபெற்ற பின் உங்களைக் காப்பாற்றும். அதற்கு உந்துசக்தியாக வங்கி சேமிப்பு இருக்கும்.

11. பங்குச்சந்தையில் புத்திசாலித்தனமான முதலீடு

பங்குச்சந்தைகள் என்றாலே அதிக ஆபத்துகள் நிறைந்தது என பயம் காட்டுவார்கள். உண்மையில் அப்படி இல்லை. உங்கள் மூளையைக் கசக்கி பிழிந்து பங்குச்சந்தையைக் கவனித்து வந்தால் எதை எப்போது விற்க வேண்டும், எதை எப்போது வாங்க வேண்டும் என்ற தெளிவு பிறக்கும். அதற்குப் பின் நீங்கள் தான் கிங். ஆழம் தெரியாமல் காலை விடுவது என்றுமே ஆபத்து தான். இதற்குள் பங்குச்சந்தை மட்டுமல்ல அனைத்து முதலீடுமே அடக்கம். ஆகவே நீங்கள் முதலீடுகள், சொத்துகள் அல்லது பங்குகள் பற்றிய முடிவுகளை எடுக்கும்போதெல்லாம் இருமுறை சிந்தியுங்கள். நிபுணர்களின் கருத்துக்களை நீங்கள் கருத்தில் கொள்வது ஆகச்சிறந்த முறை.