×

நடுரோட்டில் பெண்ணை கட்டி பிடித்து பாலியல் சீண்டல்- ஆந்திராவில் பரபரப்பு

 

ஆந்திராவில் பட்டப்பகலில் தனியாக சென்ற பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம்  மாவட்டம் பிரம்மசமுத்திரம் மண்டலம் கொல்லதொட்டியை சேர்ந்த திருமணமான பெண் வெங்கடாபுரத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த  வெள்ளிக்கிழமை மாலை கடையை மூடிவிட்டு வெங்கடாபுரம் ஏரிக்கரை வழியாக கிராமத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கிராம செயலக ஒருங்கிணைப்பாளர் நடராஜ் தடுத்து நிறுத்தி கட்டாயப்படுத்தி கட்டி பிடித்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டார்.   

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செருப்பால் அடிப்பேன் என்று கூறியதால் நடராஜ் அந்த பெண்னை சரமாரியாக தாக்கினார். தலைமுடியைப் பிடித்து இழுத்து காலால் உதைத்தான். இதனை அருகில் வயலில் வேலை செய்யும் விவசாயி ஒருவர் வந்து தடுக்க முயன்றார். அவரையும்  நடராஜ் தாக்கினர். இதனையடுத்து அந்த பகுதியில் இருந்தவர்கள் அங்கு வந்ததால் நடராஜ் தப்பியோடினார். உடனடியாக அந்த பெண்ணை கிராம மக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் நடராஜ், அமைச்சர் உஷாஸ்ரீ சரணின் ஆதராவளர், தற்போது கிராம செயலக ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.  இதனால் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். 

இவர் மீது கடந்த காலங்களில் பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில்    இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதால்  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடராஜை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.