×

வேறு மதத்தைச் சேர்ந்த மாணவன் உடன் காதல்- மகளை கொடூரமாக கொலை செய்த தந்தை

 

கேரளாவில் 14 வயது மகளை கொடூரமாக தாக்கி பூச்சி மருந்தை வாயில் ஊற்றி கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவின் ஆலுவா பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, பள்ளியில் உடன் படிக்கும் பிற மதத்தைச் சேர்ந்த மாணவனை காதலித்ததாக தெரிகிறது. அந்த மாணவனுக்கு வயது 16. கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி, அந்த சிறும, தனது காதலனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். இதனை கண்டுபிடித்த அவரது தந்தை, மகளை கண்டித்தார். இதையடுத்து, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தந்தை, மகளை இரும்பு கம்பியால் தாக்கி, வாயில் பூச்சி மருந்து ஊற்றினார். இதனை சிறுமியின் தாய் அருகில் இருந்து பார்த்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுமி, உயிருக்கு போராடினார். இந்நிலையில் இன்று அச்சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தந்தை அபீஸ் முகமதுவை போலீசார் கைது செய்தனர்.

கருமால்லூரைச் சேர்ந்த 43 வயதான அபீஸ் முகமது, கொச்சியில் உள்ள வல்லார்பாடம் கொள்கலன் மாற்று முனையத்தில் பொறியாளராக உள்ளார். சம்பவத்தைத் தொடர்ந்து, எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனைக்கு வந்த மாஜிஸ்திரேட், சிறுமியின் தாயிடம் வாக்குமூலம் பதிவு செய்தார். இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்ட அபீஸ் கைது செய்யப்பட்டு, அதன்பின் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக களமசேரி மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.