×

வாக்களித்தபின் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்து போட்டோ! கர்நாடகாவில் கலக்கல் ஏற்பாடு

 

மக்களவை தேர்தல் நடைபெற்று வரும் கர்நாடகாவில்,  சிமோகா தொகுதியில் அரண்மனை வடிவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி ஒன்று அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

சிமோகா காந்திநகரில் உள்ள இந்த வாக்குச்சாவடியில், தங்க முலாம் பூசிய தூண்கள், அலங்கார தோரணங்களுடன் அரண்மனை போல் வடிவமைத்திருந்த முகப்பில் அரண்மனை சிப்பந்திகளாய் தோற்றமளித்த அதிகாரிகள் வாக்காளர்களை வரவேற்றனர். மகாராணி, அமைச்சர், சிப்பாய், இளவரசி ஆகியோரின் உடைகள் மற்றும் ஆபரணங்கள் அணிந்து தத்ரூபமான அரண்மனைவாசிகளாய் அமர்ந்திருந்த அதிகாரிகள், வாக்காளர்களின் விரல்களில் மையிட்டு அவர்களை  வாக்களிக்க அனுமதித்தனர்.

வாக்களித்த பின் வாக்காளர்கள், ராஜாவின் கம்பீரமான சிம்மாசனத்தில் தலையில் கிரீடம் அணிந்து கொண்டு புகைப்படம் எடுத்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்காளர்கள் அதில் அமர்ந்து ஆர்வமுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். மக்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்கவும், வாக்கு சதவீதத்தை அதிகரிக்கவும் இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டதாக வாக்குச்சாவடி அலுவலர் தெரிவித்தார். வித்தியாசமான இந்த அரண்மனை வாக்குச்சாவடி அனைவரின் கவனத்தை ஈர்த்தது..