×

சோனியா, ராகுலுக்கு தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துக்கள் பறிமுதல்

 

சோனியா, ராகுல்காந்திக்கு தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் நேரு நிறுவியது நேஷனல் ஹெரால்டு பத்திரிகை. இந்த பத்திரிக்கையின் பங்குகளை, சோனியாவும், ராகுலும் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு  பங்குதாரர்களின் ஒப்புதலை  பெறாமல் மாற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து  சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது  பாஜ தலைவர் சுப்பிரமணிய சுவாமி, டெல்லி  உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தற்போது  அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, பவன் குமார் உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். 


இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு தொடர்புடைய பணமோசடி வழக்கில் Associated Journals Ltd. (AJL) நிறுவனத்தின் ரூ.661.69 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. Young Indian (YI) நிறுவனம் தொடர்புடைய ரூ.90.21 கோடி மதிப்புள்ள பங்குகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. டெல்லி, மும்பை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டிவரும் நிலையில்,   சோனியா, ராகுல்காந்திக்கு தொடர்புடைய நிறுவனத்தின் ரூ.752 கோடி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.