×

நீட் வினாத்தாள் லீக்கானது உறுதியாகியிருக்கிறது- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
 

 

நீட் வினாத்தாள் கசிந்த வழக்கில் தேர்வு முகமையை நோக்கி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு முடிவுகளையே ரத்து செய்ய வேண்டும். ஏனென்றால் மே ஐந்தாம் தேதி தேர்வு நடைபெறுகிறது. ஜூன் 14ஆம் தேதி தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்படுகின்றது, ஆனால் பத்து நாட்களுக்கு முன்பாகவே ஜூன் நான்காம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடுகின்றனர் என மனுதாரர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை ஒப்பு கொள்கிறீர்களா என தேசிய தேர்வுகள் முகமை இடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டபோது ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் மற்றும் பிறர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் அவர்களது மதிப்பெண்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என பதில் அளித்தது. நீட் தேர்வுகளை வெளிநாடுகளிலும் எழுதுகிறார்கள் அப்படி என்றால் அந்த மாணவர்களுக்கு நீட் வினாத்தாள்கள் எவ்வாறு அனுப்பி வைக்கப்படுகிறது என தலைமை நீதிபதி கேட்டபோது தூதரகங்கள் வாயிலாக அனுப்பி வைக்கப்படுகிறது என தேசிய தேர்வுகள் முகமை பதிலளித்துள்ளது. தூதரகங்களுக்கு எவ்வாறு அனுப்பி வைக்கப்படுகிறது என கேள்வி எழுப்பிய போது அது குறித்து விசாரித்து கூறுவதாக தேசிய தேர்வுகள் முகமை தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்தார்.

நீட் விவகாரத்தில் நீட் தேர்வின் புனிதத் தன்மை பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டியது இருக்கிறது என கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, சமூக ஊடகங்களில் நீட் வினாத்தாள் கசிந்தது உண்மை என்றால் இந்த வினாத்தாள் கசிவு என்பது மிகப்பெரியதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது, வாட்ஸ் அப், டெலிகிராம் போன்றவற்றில் இவை கசிந்திருக்கிறது என்றால் அது காட்டு தீ போல பரவி இருக்கும், இது 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களின் வாழ்க்கை சார்ந்த விவகாரம் என அதிருப்தி தெரிவித்தார். கருணை மதிப்பெண்களால் 67 பேர் முழுமதி பெண்கள் பெற்றுள்ளார்கள் இவர்களை தவிர இந்த கருணை மதிப்பெண்களால் பலனடைந்தவர்கள் எத்தனை பேர்? என  கேள்வி எழுப்பினார்.

மேலும் நீட் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டறியாவிட்டால் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது அவசியம், நீட் தேர்வு வினாத்தாள்கள் எப்போது தயாரிக்கப்படுகின்றது?, அது எப்போது அச்சிடுவதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றது?, எப்போது அச்சிடப்படுகின்றது?, அச்சிடப்பட்ட பிறகு எப்போது அது தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது? நாடு முழுவதும் எத்தனை மையங்களில் நீட் தேர்வு எழுதப்பட்டன?, நீட் மறுதேர்வு கோர முகாந்திரம் என்ன?, 1,563 தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதா?, அதில் முழு மதிப்பெண்கள்  பெற்ற 6 தேர்வர்களும் அடக்கமா? போன்ற அனைத்து விவரங்களையும் தேதி வாரியாக வழங்குமாறு தேசிய தேர்வுகள் முகமையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். நீட் தேர்வு கசிவு மற்றும் நீட் தேர்வு நடக்கும் நேரம் ஆகியவற்றிற்கு இடையே கால நேரம் ஒத்துப் போகிறது என்றால் அதை நாங்கள் தீவிரமாக விசாரிக்க போகிறோம் எனவும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார்.