×

"ஆம் ஆத்மி கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை" - அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்!

 

திகார் சிறையில் இருந்து இடைக்கால ஜாமினில் நேற்று வெளியே வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுமன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அத்துடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக அரசின் கைது நடவடிக்கை குறித்து பேசும் போது, "ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சி - தொடங்கி 10 ஆண்டுகள் தான் ஆகின்றன. இந்த சிறிய கட்சியை தீர்த்து கட்டும் முயற்சியை பிரதமர் மோடி நிறுத்தவில்லை. ஒரே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 4 முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் ஆத் ஆத்மி கட்சியின் பலம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. தேசத்தின் மிகப்பெரிய ஊழல்வாதிகளை பாஜகவில் இணைத்து வருகின்றனர். ஆனால் தான் ஊழலுக்கு எதிராக போராடி வருவதாக பிரதமர் மோடி பேசி வருகிறார். 

நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என பிச்சை எடுக்க வந்திருக்கிறேன். எனக்கு கிடைத்துள்ள நேரத்தில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். என் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நாட்டு மக்களுக்கு சிந்தத் தயார். இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று கேட்கிறார்கள். பாஜக கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று நான் கேட்கிறேன். பிரதமர் மோடியும் அரசியலில் இருந்து ஓய்வுபெற உள்ளார். மோடி ஓய்வு பெற்றால் அவரது உத்தரவாதத்தை பூர்த்தி செய்யப் போவது யார்? ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு பாஜக ஆட்சி இருக்கப் போவதில்லை. முதலமைச்சர் பதவி மீதும், பிரதமர் பதவி மீதும் எனக்கு ஆசை இல்லை" என்றார்.