×

டெல்லியில் 12 அடி உயரத்தில் மகாத்மா காந்தி சிலை- குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

 

இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு  இன்று (செப்டம்பர் 4, 2023) புதுதில்லியில் உள்ள காந்தி தர்ஷனில் மகாத்மா காந்தியின் 12 அடி உயரச்சிலை  மற்றும் காந்தி வாடிகாவையும் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவில் பேசிய குடியரசுத் தலைவர், மகாத்மா காந்தி உலக சமுதாயம் முழுமைக்கும் ஒரு வரப்பிரசாதம் என்றார்.  அவரது கொள்கைகள் மற்றும் மதிப்புகள் முழு உலகிற்கும் ஒரு புதிய திசையைக் கொடுத்துள்ளன. உலகப் போர்கள் நடந்த காலத்தில் உலகம் பலவிதமான வெறுப்புகளாலும், முரண்பாடுகளாலும் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில் அகிம்சை வழியைக் காட்டினார். சத்தியம் மற்றும் அகிம்சை குறித்த காந்திஜியின் சோதனை அவருக்கு ஒரு சிறந்த மனிதர் என்ற அந்தஸ்தை வழங்கியது என்று அவர் மேலும் கூறினார்.

அவரது சிலைகள் பல நாடுகளில் நிறுவப்பட்டுள்ளன, உலகெங்கிலும் உள்ள மக்கள் அவரது கொள்கைகளை நம்புகிறார்கள் என்றும் அவர் பகிர்ந்து கொண்டார். நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரின் எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டிய அவர், காந்திஜி காட்டிய சத்தியம் மற்றும் அகிம்சையின் பாதையை உலக நலனுக்கான பாதையாகப் பல சிறந்த தலைவர்கள் கருதினர். அவர் காட்டிய பாதையைப் பின்பற்றுவதன் மூலம், உலக அமைதியின் இலக்கை அடைய முடியும் என்று அவர் வலியுறுத்தினார். பொது வாழ்க்கையிலும்,  தனிப்பட்ட வாழ்க்கையிலும் புனிதத்தன்மைக்கு காந்திஜி அதிக முக்கியத்துவம் கொடுத்தார் என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

தார்மீக வலிமையின் அடிப்படையில் மட்டுமே அகிம்சையின் மூலம் வன்முறையை எதிர்கொள்ள முடியும் என்று அவர் நம்பினார். தன்னம்பிக்கை இல்லாமல், பாதகமான சூழ்நிலைகளில் விடாமுயற்சியுடன் செயல்பட முடியாது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். வேகமாக மாறிவரும் மற்றும் போட்டி நிறைந்த இன்றைய உலகில், தன்னம்பிக்கையும் நிதானமும் மிகவும் தேவை என்று அவர் கூறினார்.

காந்திஜியின் கொள்கைகள் மற்றும் மதிப்புகள் நமது நாட்டிற்கும் சமூகத்திற்கும் மிகவும் பொருத்தமானவை என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஒவ்வொரு குடிமகனும், குறிப்பாக இளைஞர்களும், குழந்தைகளும் முடிந்தவரை காந்தியடிகளைப் பற்றிப் படித்து, அவரது கொள்கைகளை உள்வாங்கும் வகையில் அனைவரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் காந்தி ஸ்மிருதி மற்றும் தர்ஷன் சமிதி மற்றும் இதுபோன்ற பிற நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

புத்தகங்கள், திரைப்படங்கள், கருத்தரங்குகள், கேலிச்சித்திரங்கள் மற்றும் பிற ஊடகங்கள் மூலம் காந்திஜியின் வாழ்க்கை போதனைகளைப் பற்றி இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் காந்திஜியின் கனவுகளின் இந்தியாவைக் கட்டமைப்பதில் அவர்கள் கணிசமான பங்களிப்பை வழங்க முடியும் என்றும் அவர் கூறினார்.