×

அனாதை ஆசிரம உணவில் விஷமா? வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இருவர் பலி

 

திருப்பதியில்  செயல்பட்டு வந்த தனியார் அனாதைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லத்தில் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருச்சானூரில் சமூக சேவைக்கான பீப்பிள்ஸ் ஆக்ஷன் எனும் பாஸ் மனோவிகாஸ் அனாதைகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளிகளுக்கான இல்லம் உள்ளது. இங்கு சுமார் 70 பேர் உள்ள நிலையில் 30 பேர் அனாதை பிள்ளைகள் ஆவர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அங்கு தங்கியிருந்த பிள்ளைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அதேபகுதியில் உள்ள மருத்துவர் ஆலோசனையின்படி ஓ.ஆர்.எஸ். குடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் 10 பேர் நிலைமை கவலைகிடமாக மாறியது. இதனால் அவர்களை திருப்பதி ரூயா அரசு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். 

மருத்துவமனைக்கு  வரும் வழியிலேயே 30 வயது கொண்ட கணபதி என்பவர் இறந்தார். மேலும்  சேஷாச்சலம் (16)என்று மாற்றுத்திறனாளையும் இன்று காலை இறந்தார். தொடர்ந்து அனிதா (20), தேஜா (15), ஈஸ்வர் ரெட்டி (25), பிரதீப் (30), ஹிமதேஜா (20) ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட திருப்பதி மாவட்ட மருத்துவம் மற்றும்   சுகாதார அலுவலர்  ஸ்ரீஹரி ரூயா மருத்துவமனையில்  அவசர சிகிச்சை பிரிவில்  மனநலம் குன்றிய மாற்றுதிறனாளி நோயாளிகளின் உடல்நிலை குறித்து நேரில் பார்வையிட்டு டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திருப்பதியில் உள்ள பாஸ் மனோ விகாஸ் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மையத்தில் 2 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இருவர் வயிற்றுப்போக்கால் இறந்தனர். அங்கு சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உயிரிழப்பிற்கான காரணம் தெரிந்து கொண்டு அதற்கேற்ப மேல் நடவடிக்கை எடுக்கப்படும். முன்னதாக தற்போது உணவில் விஷம் கலந்ததா அல்லது தண்ணீர் மாசுபட்டதா என விசாரித்து வருகிறோம். இதற்காக உணவு தரக்கட்டுபாடு ஆய்வாளர் , டாக்டர்கள் குழுவினர் அந்த இல்லத்தில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உணவு, தண்ணீர் மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்யப்படும். மேலும் மாவட்டத்தில் டையேரியா காய்ச்சல் உள்ளதா என்பது குறித்தும் ஆங்காங்கே மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது, பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் தண்ணீர் டேங்கர்கள் சுத்தம் செய்யவும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் அந்தந்த பஞ்சாயத்து களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி 26 ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு தூய்மைப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.