×

சசிகலாவுக்கு ரீ-என்ட்ரி கிடையாது: ஜெயக்குமார்

 

தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும் பாராமல் மேடையில் வைத்து அமித் ஷா அவமானப்படுத்தியது மிகப்பெரிய தவறு. மேடையில் இருந்த அமித் ஷா  உடல் மொழியே அவர் ஆத்திரத்தில் தமிழிசையை பேசியதை உணர முடிந்தது. மேடை நாகரீகம், பண்பாடு என்னவென்று தெரியாமல் அமித் ஷா நடந்து கொண்டுள்ளார். உள்துறை அமைச்சராக இருந்து கொண்டு தமிழிசையை மேடையில் வைத்து கடுமையாக பேசியிருக்கக் கூடாது.

சசிகலாவுக்கு எக்ஸிட் கொடுத்தாச்சு, ரீ-என்ட்ரி கிடையாது. சசிகலாவிற்கும், அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்து சமுகத்திற்கும் பிரதிநிதித்துவம் கொடுத்து அனைவரும் சமம் என்ற சமத்துவ அடிப்படையில் அதிமுக பயணிக்கிறது. தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது என்றால் சரியான வாதம். 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு வாக்கு சதவீதம் அதிகரித்ததாக அண்ணாமலை கூறுகிறார். எத்தனை தேர்தல் வந்தாலும் பாஜக வாக்குசதவீதம் அதிகரிக்காது. ஆயிரம் கருணாநிதி வந்தாலும் அழிக்க முடியாத அதிமுகவை அண்ணாமலை அழித்து விட முடியுமா? அண்ணாமலை இல்ல, பின்லேடனே வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறாது. 2026 மட்டுமல்ல, 2031,2036,2041 எந்த தேர்தலிலும் பாஜக வெற்றி பெறாது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்க அதிமுக முடிவெடுத்துள்ளதை போல் தொண்டர்களும் புறக்கணிப்பார்கள். எங்களுக்கு ஓட்டு போடும் பொதுமக்களும் புறக்கணிப்பார்கள். காலம் காலமாக இரட்டை இலைக்கு வாக்களிக்கும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்களின் கைகள் எந்தக் காலத்திலும் மாறவே மாறாது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக குறுக்குவழியில் வெற்றிபெற முயற்சிக்கும். விக்கிரவாண்டி தொகுதியில்தான் முழு அரசு இயந்திரமும் செயல்படும். ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்பதால் அதிமுக விக்கிரவாண்டியில் போட்டியிடவில்லை” என்றார்