×

அண்ணாமலையின் பாதயாத்திரையில் ‘செட் அப்’ செய்யப்பட்ட பெண்கள்

 

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரைக்கு சரக்கு வாகனங்களில் அழைத்து வரப்பட்ட பெண்களை கையில் பட்டியல் வைத்து கணக்கெடுப்பு நடத்திய பாஜகவினரால் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரை கடந்த ஐந்து தினங்களாக மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று ஆறாவது நாளில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில்  பாதயாத்திரை தொடங்கினார். கோட்டை பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பாதயாத்திரை ஆனது திருமயம் கடைவீதி பாப்பா வயல் வழியாக திருமயம் பேருந்து நிலையம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று நிறைவடைந்தது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, செல்லும் இடங்களில் கூட்டம் இல்லாததால் ஒரே இடத்தில் நின்ற பெண்களை அவர் செல்லும் இடங்களுக்கு அடுத்தடுத்து அழைத்து வந்த நிகழ்வு பாஜக கட்சியின் பரிதாபத்தை வெளிப்படுத்தியதாக அமைந்தது. மேலும் திருமயம் பேருந்து நிலையம் அருகே பாதயாத்திரையின் இறுதியாக அண்ணாமலை பேசி முடித்த பிறகு சரக்கு வாகனத்தில் வைத்து சிற்றுண்டி வழங்கப்பட்டதை முண்டியடித்து போட்டி போட்டு அதனை வாங்க பாஜகவினர் மற்றும் பொதுமக்களால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.