×

மழை காரணமாக பாகிஸ்தான் - இலங்கை இடையிலான போட்டி தொடங்க தாமதம்!

 
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்ள் பலப்பரீட்சை நடத்தவுள்ள நிலையில், மழை காரணமாக போட்டி தொடங்க தாமதம் ஏற்பட்டுள்ளது.  

16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு இடங்களை பிடித்த பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியை பந்தாடிய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில், இன்றைய சூப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த இரு அணிகளுமே தலா ஒரு போட்டியில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் எளிதாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடலாம். ஆகையால் இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகாளை பொறுத்தவரையில் 2015ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் அணி இலங்கையிடம் தோற்றதே இல்லை. கடைசியாக விளையாடியுள்ள 8 போட்டிகளிலும் பாகிஸ்தானே வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால் இந்தியாவுடன் இறுதிப் போட்டியில் விளையாடும். இந்த நிலையில், போட்டி நடைபெறும் மைதானத்தில் மழை பெய்து வருவதால் போட்டி தொடங்க தாமதமாகியுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் டாஸ் போடவில்லை. மழை நின்றவுடன் டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. .