×

ரப்பர் வாங்கி தராததால் 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

 

ரப்பர் வாங்கி தராததால் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி பெற்றோரிடம் சண்டை போட்டுக்கொண்டு தூக்கு மாட்டிக்கொண்ட சம்பவம் செங்கல்பட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கருநீலம் பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரன்-பரிமளா தம்பதியினர். இவர்களுக்கு 14 வயதில் மனிஷா என்கிற மகள் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில் மனிஷா அவரது பெற்றோரிடம் ரப்பர் கேட்டுள்ளார். அதற்கு அவரது தாயார் நாளை வாங்கித் தருகிறேன் என சொன்னதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே பள்ளி மாணவி மனிஷாவிற்கும், அவரது தாயார் பரிமளாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் மணிஷா தன் கையில் இருந்த பென்சிலை எடுத்து அவரது தாய் பரிமளா மீது குத்தியுள்ளார். அப்போது மருத்துவமனைக்கு தாயார் சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார். அப்போது மனிஷா அவரது அறையில் இருந்து நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த தாய் ஜன்னல் வழியே பார்த்தபோது மின்விசிறியில் மனிஷா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

பின்பு சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் மறைமலைநகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..