×

தண்டவாளத்தில் அசந்து தூங்கிய இளைஞர் ரயில் மோதி பலி!

 

வேதாரண்யம் அருகே தண்டவாளத்தில் தூங்கிய போது ரயிலில் அடிப்பட்டு ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வடமழை மணக்காடு கிராமத்தில் உள்ள ஆகாசமாரியம்மன் கோவில் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொண்டு விட்டு மூன்று இளைஞர்கள் அருகே இருந்த ரயில் தண்டவாளத்தில் அதிகாலையில் படுத்து தூங்கி உள்ளனர்.

அப்போது  காலை 5 மணிக்கு திருத்துறைப்பூண்டியிலிருந்து அகஸ்தியன்பள்ளி நோக்கி சென்ற  ரயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டதில் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த குமாரசாரதி என்ற இளைஞர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த துளசிநாராயணன் மற்றும் பிரபாகரன் ஆகிய இரண்டு இளைஞர்களும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.