×

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் துணிச்சலான பேச்சுக்கு பாராட்டு - நடிகர் சத்யராஜ்!

 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் துணிச்சலான பேச்சுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். 

கோவையில் வசித்து வந்த நடிகர் சத்யராஜின்  தாயார்  நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக கடந்த மாதம் 11 ஆம் தேதி காலமானார். அவருக்கு வயது 94. நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நடிகர் திரு.சத்யராஜ் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அண்மையில் காலமான அவரது தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வின் போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் , இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர்  உடன் இருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சத்யராஜ், சனாதன தர்மம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணிச்சலுக்கு பாராட்டு தெரிவிப்பதாக கூறினார்.  உதயநிதி ஸ்டாலின் மிகவும் தெளிவாக பேசியுள்ளதாகவும், அவர் ஒவ்வொரு விவகாரத்தையும் கையாளும் விதத்தைப் பார்க்கும் போதும் பெருமையாக உள்ளதாகவும் கூறினார். அவருடைய சிந்தனை தெளிவுக்கும், துணிச்சலுக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறினார்.