×


அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு

 

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின்சொத்து குவிப்பு வழக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக திமுக அரசு 2006 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. 2001 முதல் 2006 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2020ல் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில்,  இந்த வழக்கில் எங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டது.  ஏற்கனவே அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கிய நிலையில்,  அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் முடக்கியது. 

இந்த சூழலில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு கடந்த 19ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  முக்கிய ஆவணங்கள் இருப்பதால் வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை ஏற்கனவே தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.  இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.இந்த வழக்கில்  அமலாக்கத்துறை முறையீட்டு மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணையை செப்டம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம். அமலாக்கத்துறை, அமைச்சர் சார்பில் விசாரணைக்கு யாரும் ஆஜராகாததால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.