×

பாஜக உடனான கூட்டணி முறிவில் உறுதியாக உள்ளோம்- கடம்பூர் ராஜூ

 

கள்ளத்தொடர்பு வைப்பதில் திமுகவிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம், அவர்களது குணமே அதுதான். கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொது நிறுவனங்களின் குழு இன்று புதுக்கோட்டையில் பல்வேறு பொது நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ள வருகை தந்துள்ளது. இந்நிலையில் இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், சி விஜயபாஸ்கர் ஆகியோர் புதுக்கோட்டை கீழே ஏழாம் வீதியில் உள்ள புவனேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, “அமைச்சர் எ.வ. வேலு வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதை தொலைக்காட்சியில் தான் பார்த்தோம், கள்ளத்தொடர்பு வைப்பதில் திமுகவிற்கு நோபல் பரிசு கொடுக்கலாம். அவர்களது குணமே அதுதான், கள்ள உறவு என்பது திமுகவிற்கு கைவந்த கலை. அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் அவ்வாறு கூறியுள்ளார். சசிகலா தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வரட்டும், ஏற்கனவே வந்த தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக உள்ளது. பாஜக உடன் கூட்டணி முறிவில் உறுதியாக உள்ளோம், பொதுச் செயலாளர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்,அவரது முடிவு தான் எங்களது முடிவும்” என்றார்.