×

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது திமுகவின் தொழில்- எஸ்பி வேலுமணி

 

அதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக வர ஒட்டு மொத்த தமிழக மக்கள் முடிவு செய்துள்ள நிலையில், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் அதற்காக பாடுபட வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் விருதுநகர் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி. வேலுமணி, ஆர். பி. உதயகுமார், கே. டி. ராஜேந்திரபாலாஜி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ் .பி. வேலுமணி, “திமுகவை கடுமையாக பேசி, தவறுகளை சுட்டிக்காட்டி, அதிமுகவுக்கு விசுவாசமாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி. செய்யாத தவறுக்காக அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டது. அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது திமுகவின் தொழில். 

அதிமுக தொண்டன் யார் மீது திமுக பொய் வழக்கு போட்டாலும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், நாங்களும் அதிமுக தொண்டனுக்கு உறுதுணையாக இருப்போம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன், கூடவே சட்டமன்றத் தேர்தலும் வரலாம். நாடாளுமன்றத் தேர்தலிலும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும், அதிமுக வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக வர ஒட்டு மொத்த தமிழக மக்கள் முடிவு செய்துள்ள நிலையில், நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் அதற்காக பாடுபட வேண்டும்” என்றார்.