×

தந்தை பெரியாரின் 145-ஆவது பிறந்த நாள் - அதிமுக சார்பில் மரியாதை!

 

தந்தை பெரியாரின் 145-ஆவது பிறந்த நாளையொட்டி வருகிற 17ம் தேதி அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான 17.9.2023 - ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணியளவில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

சென்னையில், காலை 10 மணியளவில், அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களுடைய திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது திருஉருவப் படத்திற்கு, ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். அதே போல், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் இதர மாவட்டங்களிலும், கழக அமைப்புகள் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும், ஆங்காங்கே உள்ள தந்தை பெரியார் அவர்களுடைய திருஉருவச் சிலைகளுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும்; பிற மாநிலங்களில், மாநிலக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும், மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள்.