×

காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக வந்த மூதாட்டி மயங்கி விழுந்து பலி

 

செங்கம் அடுத்த பாச்சல் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்த  மூதாட்டி திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த எறையூர் பகுதியை சேர்ந்தவர் கம்சலா (வயது 72). இவர் இறையூர் பகுதியில் உள்ள வயலில் தனியாக தங்கி இருந்து வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு பக்கத்து வயலுக்கு சொந்தகாரரான பேபி என்பவருக்கும் கம்சலா என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தனியாக இருந்த தன்னை பேபி என்பவர் அடித்து தாக்கியதாக பாச்சல் காவல் நிலையத்தில்  கம்சலா புகார் மனு அளித்துள்ளார்

இந்நிலையில் இன்று விசாரணைக்காக இரு தரப்பினரையும் பாச்சல் காவல்துறையினர் அழைத்து இருந்தனர். விசாரணைக்காக 72 வயது கம்சலா காவல் நிலையம் வந்த சிறிது நேரத்தில் சுருண்டு விழுந்துள்ளார். பின்னர் காவல்துறையினர் 108 ஆம்புலன்ஸ் சை வரவழைத்து அதில் உள்ள மருத்துவர்கள் பரிசோதித்ததில் கம்சலா இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் இறந்த உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக பாய்ச்சல் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். விசாரணைக்காக  வந்த மூதாட்டி காவல் நிலைய வளாகத்திலேயே சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது