×

ஈபிஎஸ்-க்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு!!

 

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சரும்,  அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை துறையில் டெண்டர் பெறப்பட்ட விவகாரத்தில் சுமார் 4,800 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.  இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டது.  அத்துடன் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தாக்கல் செய்த நிலையில்,  உச்சநீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது.  பின்னர் மீண்டும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க அனுமதி அளித்தது.  லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் எடப்பாடி பழனிசாமி மீது குற்றமில்லை என 2018 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் ஏற்கவில்லை. மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்ட நிலையில்,  இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் முடிவை ஒத்தி வைத்தார்.

இதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையில் ரூபாய் 4,800 கோடி டெண்டர் முறைகேடு நடைபெற்றதாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க கூறிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆட்சி மாற்றம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் குறித்து உச்ச நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. டெண்டர் முறைகேடு புகாரில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது ரூ.4800 கோடி அளவுக்கு நெடுஞ்சாலை டெண்டர் எடுத்ததில் முறைகேடு என புகார் அளிந்துள்ளது. ஆர்.எஸ். பாரதி கொடுத்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து  லஞ்ச ஒழிப்பு துறை மேல்முறையீடு செய்துள்ளது.