×

இந்தியன் 2 படத்திற்கு தடையா? கடைசி நேரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

 

இந்தியன் 2 படத்தை வெளியிட தடையில்லை மதுரையை சேர்ந்த வர்மக்கலை பயிற்சியாளர் இராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வர்மக்கலை முத்திரையை இந்தியன் 1 ல் அனுமதியுடனும் இந்தியன் 2 ல் அனுமதியின்றியும் பயன்படுத்தி உள்ளதாகவும், தன்னுடைய பெயரை படத்தில் இணைத்து வெளியிட வேண்டும் அது வரை இந்தியன் 2 படத்தை வெளியிட தடை விதிக்க கோரி மதுரையை சேர்ந்த வர்மக்கலை பயிற்சியாளர் இராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கு மதுரை மாவட்ட 4 வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி செல்வ மகேஸ்வரி முன் விசாரணை நடைபெற்றது. வர்மக்கலை பயிற்சியாளர் இராஜேந்திரன், இயக்குனர் சங்கர், நடிகர் கமலஹாசன், தயாரிப்பாளர் சுபாஷ் கரண் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினார்கள்.

மனுதாரர் இராஜேந்திரன் வழக்கறிஞர் வாதிடுகையில் "இந்தியன் 1 படத்தில் எங்களின் அனுமதியோடு வர்மக்கலை முத்திரை பயன்படுத்தப்பட்டது, இந்தியன் 2 படத்தில் எங்களின் அனுமதியில்லாமல் வர்மக்கலை முத்திரையை பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியன் 1 படத்தில் இராஜேந்திரன் பெயர் டைட்டில் கார்டில் போடப்பட்டது. இந்தியன் 2 படத்தில் இராஜேந்திரன் பெயரை டைட்டில் கார்டில் போட வேண்டும். மனுதாரர் இராஜேந்திரன் 50 வருடங்களாக வர்மக்கலையை பயிற்று வித்து வருகிறார். இந்தியன் 1 படப்பிடிப்பில் வர்மக்கலை பயிற்சியாளர் இராஜேந்திரன் நேரில் பங்கேற்றார். வர்மக்கலை குறித்து இராஜேந்திரன் 1993 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளில் 2 புத்தகங்களை எழுதி உள்ளார், புத்தகத்தில் உள்ள தகவல்களை தழுவி இந்தியன் 1 காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது" எனக் கூறினார்.

இயக்குனர் சங்கர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில் "வர்மக்கலை உலக அளவில் உள்ள கலையாகும், அகஸ்தியர் தோற்றுவித்தது வர்மக்கலைக்கு யாரும் உரிமை கோர முடியாது, கராத்தே போன்ற கலைகள் போல வர்மக்கலை உலகுகெங்கும் பரவி உள்ளது, இந்தியன் 1 இராஜேந்திரன் வர்மக்கலை குறித்த தகவல்கள் மட்டுமே தந்தார், இந்தியன் 2 வர்மக்கலையை தழுவி எடுக்கவில்லை, இந்தியன் 2 ஊழலுக்கு எதிராக எடுக்கப்பட்ட படமாகும், இந்தியன் 2 படம் குறித்த அறிவிப்புகள் 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது, மனுதாரர் இராஜேந்திரன் 2024 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்து உள்ளார், இந்தியன் 2 படம் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறும், இந்தியன் 2 படத்திற்கு ஆயிரக்கணக்கான திரைக்கலைஞர்கள் இரவு, பகலாக உழைத்து உள்ளனர், அதனை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும், இந்தியன் 2 படத்தை தடை செய்ய கோரிய வழக்கில் எந்தவொரு முகாந்திரமும் இல்லை, ஆகவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும், இந்தியன் 2 படத்திற்க்கான டிக்கெட் விற்பனை உலகெங்கும் நடைபெற்று உள்ளது, இந்தியன் 2 படத்தை தடை செய்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடும்" எனக் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் வழக்கறிஞர் வாதிடுகையில் "அகத்தியர் வழங்கிய வர்மக்கலையின் முத்திரைகளை கமலஹாசன் பயன்படுத்தி உள்ளார். நடிகர் கமல்ஹானுக்கும், இராஜேந்திரனுக்கும் எந்தவொரு ஒப்பந்தமும் செய்யவில்லை, இவ்வழக்கை சென்னையில் தான் விசாரிக்க வேண்டும்" என கூறினார். இராஜேந்திரன் வழக்கறிஞர் மீண்டும் வாதிடுகையில் "எங்களின் முத்திரைகளை இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது, இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்படும் முத்திரைகள் குறித்த விபரங்களை எங்கே இருந்து எடுக்கப்பட்டது என நீதிமன்றத்தில் கூறவில்லை, புத்தகங்களில் உள்ள முத்திரைகள் தான் இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது" எனக் கூறினார்.

பின்னர் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது, அதில் "இந்தியன் 2 படத்தை வெளியிட தடையில்லை எனவும் இந்தியன் 2 படத்தை வெளியிட தடை விதிக்க கோரி மதுரையை சேர்ந்த வர்மக்கலை பயிற்சியாளர் இராஜேந்திரன் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக கூறினார்" மதுரை மாவட்ட 4 வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி செல்வ மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.