×

மீண்டும் ஒரு 'மதுக் கொலை'... பிப் 1 முதல் மது விலையை அதிகரிப்பு- பாஜக கண்டனம்

 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மது போதையில் தன் 5 மாத கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து கீழே தள்ளி கொன்று விட்ட நிகழ்வு அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி தன ட்விட்டர் பக்கத்தில், “திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மது போதையில் தன் 5 மாத கர்ப்பிணி மனைவியை எட்டி உதைத்து கீழே தள்ளி கொன்று விட்ட நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது. பெற்ற தாயின் மீது கல்லை தூக்கி போட்டு கொலை, தாயை எரித்து கொலை, தந்தையை அடித்து கொலை, மனைவியை, குழந்தையை கழுத்தை நெரித்து கொலை என டாஸ்மாக் சரக்கை குடித்த பின்னர் சுயநினைவின்றி குடிகாரர்களின் மதுக்கொலைகள் தொடர்கிறது. இந்த குடி கெடுக்கும் படுபயங்கர மரணங்களுக்கு காரணம் 'குடி' தான், டாஸ்மாக் தான் எனும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது. நீட் தேர்வு பயத்தினால், மன அழுத்தத்தினால் 22 பேர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, நீட் தேர்வை எதிர்கொள்ள முறையான கல்வி முறையை கொடுத்து மாணவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளாமல், நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் நடத்துவதாக நாடகமாடுபவர்கள், பல நூற்றுக்கணக்கான டாஸ்மாக் குடிகாரர்கள் தங்களின் தந்தையை, தாயை, மனைவியை, சகோதரனை, குழந்தையை, சகோதரியை, நண்பர்களை தினம் தினம் கொன்று குவித்து கொண்டிருக்கும் கொடுமையை கண்டும் காணாமல் இருப்பதற்கு பெயர் தான் திராவிட மாடலா? 

இந்த நிலையில், இரக்கம் இல்லாத தமிழக அரசு பிப்ரவரி 1 ம் தேதி முதல் மது விலையை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. வயிற்றெரிச்சலையும் அள்ளி கொடுத்து விட்டு, வயிற்றிலும் அடிப்பது தான் அரசின் கொள்கையா? நூற்றுக்கணக்கான உயிர்களை பலி வாங்கும் மதுவை விற்று வருவாயை அதிகரிக்கும் இந்த கொள்கை தேவையா? இது கொடுமையில்லையா?அதற்கு காரணமான மதுவை விற்பதை நிறுத்த வேண்டாமா? பாரதி இன்று இருந்திருந்தால், 

"என்று தணியும் இந்த குடிகாரர்களின் தாகம்? 
என்று மடியும் இந்த அரசின் டாஸ்மாக் மோகம்?"   

என்றே பாடியிருப்பான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.