×

தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கில் சிபிஐ நியாயமாக விசாரணை நடத்தவில்லை- ஐகோர்ட்

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் எந்த அதிகாரிகளின் பெயரை  குறிப்பிடாமல் யார் மீது விசாரணை நடத்திவருகிறீர்கள் என சிபிஐக்கு கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இது சிபிஐயின் கையாலாகத்தனத்தை காட்டுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை முடித்து வைத்து தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர் மற்றும் செந்தில்குமார் அடங்கிய அமர்வில்  ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்டிருந்த தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் லிங்க திருமாறன் தரப்பில்,  மனித உரிமை ஆணைய சட்டத்தின் படி ஏற்கனவே முடிக்கப்பட்ட வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது என்றும், மாநில மனித உரிமை ஆணையமும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் விசாரித்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடியாது என்றும் வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. நடந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த அதிகாரிகளும் வருந்தவில்லை. அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்?  யார் பொறுப்பேற்பார்க்ள் எனக் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் வழக்கு  மீண்டும் விசாரணை வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், ஏற்கனவே இது குறித்து கிழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ததாகவும், ஆனால் அதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் வழக்கு நிலுவையில் இருக்கும்போது மனுதாரர் இவ்வாறு கோரிக்கை வைக்க முடியாது என்று தெரிவித்தார்.

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்கள் விசாரிக்க வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். சம்பவம் நடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் சம்பவத்துக்கு பிறகு இரண்டு ஆண்டுகளுக்கு பின்பும் இந்த கணக்கெடுப்பு நடத்த வேண்டும், இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சிபிஐ நியாயமாக விசாரணை நடத்தவில்லை, இது சிபிஐ கையாளகதனத்தை காட்டுகிறது, பொது மக்களை புழு மாதிரி நசுக்கி உள்ளார்கள், இந்த வழக்கின் முக்கியத்துவத்தை உணராமல் விசாரித்து வருகிறீர்கள், எந்த அதிகாரிகளையும்  குறிப்பிடாமல் யார் மீது விசாரணை நடத்திவருகிறீர்கள் என கடும் கண்டனம் தெரிவித்தனர்.சம்பவம் நடந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை என எப்படி அறிக்கை தாக்கல் செய்ய முடியும் ? எனவும் கேள்வி எழுப்பினா்.