×

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு ஆண் குழந்தை- ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

 

குடும்ப கட்டுப்பாடு செய்த பெண்ணுக்கு மீண்டும்  ஆண் குழந்தை பிறந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பொண்ணுக்கு 3 லட்சம்  இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ராக்கு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில், எனக்கும்  கடந்த 2007 இல் திருமணம் நடைபெற்றது. 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், நான் கடந்த 2014 விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டேன் ஆனால் எனக்கு முறையான அறுவை சிகிச்சை மேற்கொள்ளாததால், மீண்டும் கருத்த ரித்தேன். எனது குடும்ப பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, அக்குழந்தையை கருவில் கலைக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் 2020 ஆண்டு  மனு தாக்கல் செய்தேன்.

அப்போது குழந்தையின் கருவே கலைக்க வேண்டாம், பிறக்கும் குழந்தையை பராமரிக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும் என அரசு  தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அக்குழந்தையை வளர்க்க சிரமப்பட்டு வருகிறேன். எனவே குழந்தையை பராமரிக்க உதவுவதுடன், எனக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்க உத்தர விட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இது போன்று ஏற்கனவே இரு வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மனு தாரருக்கும் பொருந்தும் என்றார்.

எனவே  அரசு சார்பில் ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஏற்கனவே மனுதாரருக்கு அரசாணைப்படி ரூ.30 ஆயிரம் வழங்கியிருப்பதால், இழப்பீட்டு தொகை ரூ. 2.70 லட்சம் வழங்க வேண்டும். 5 வதாக பிறந்த குழந்தை இலவச கல்வி பெறும் வகையில் (அரசு, தனியார் பள்ளிகளில்) அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்ய வேண்டும். அக்குழந்தைக்கு 21 வயது பூர்த்தியாகும் வரை ஆண்டுக்கு தலா ரூ.1.20 லட்சத்தை (மாதம் ரூ.10 ஆயிரம்) அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.