×

மகளிர் உரிமைத் தொகை திட்டம்- திமுகவினருக்கு துரைமுருகன் முக்கிய அட்வைஸ்

 

முதலமைச்சரும், திமுக தலைவருமான செப். – 15 அன்று தொடங்கி வைக்கப்படவுள்ள அரசின் சாதனைத் திட்டமான “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை” பட்டித் தொட்டி முதல் பட்டினக்கரை என  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களிடமும் முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டிய ஏற்பாடுகளை திமுக நிர்வாகிகள் செய்திட வேண்டும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் கழக அரசின் மிக முக்கியமான மக்கள் நலத்திட்டமான “கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்ட”மானது பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால், தமிழ்நாடு முழுமைக்கும் காஞ்சிபுரத்திலிருந்து தொடங்கி வைக்கப்படுகிறது.


பெறப்பட்ட 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில் 1 கோடியே 6 லட்சம் பேர்களுக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. நிராகரிக்கப்பட்டவர்களுக்கு என்ன காரணம், திரும்ப விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார். ஒரு கோடி பெண்கள் என்பது கிட்டத்தட்ட ஒரு கோடி குடும்பங்கள் என்பதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான நிதிச்சூழலிலும் ஒரு கோடி மகளிர் பயன்பெறும் வகையில் தொடங்கப்படும் இத்திட்டத்தை அனைத்து மக்களிடமும் முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டியது மிக அவசியம்.

இத்திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பின்வரும் செயல்பாடுகளை மேற்கொள்ள அனைத்து ஒன்றிய - நகர – பகுதி – பேரூர் - கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும்  மாவட்டச் செயலாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்ளப்பபடுகிறார்கள்.

1.    கோலம்: 1000 ரூபாய் திட்டத்தை முன்னிறுத்தி வீடுகளில் ‘கலைஞர் உரிமைத் தொகைக்கு நன்றி’ ‘உரிமைத் தொகை 1000’ போன்ற வாசகங்களை எழுதி கோலமிடவேண்டும். அனைத்து நிர்வாகிகள் வீடுகளிலும் கோலமிடப்படுவதை மாவட்டச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

 2.    சுவரொட்டிகள்: மக்கள் கூடும் இடங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் சுவரொட்டி ஒட்டி, விளம்பரம் படுத்த வேண்டும்.


3.    இனிப்பு வழங்குதல்: பேருந்துநிலையங்கள், அங்காடிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடிட வேண்டும்.  இனிப்பு வழங்கும் போது சிறு துண்டறிக்கையை சேர்த்து வழங்கிட வேண்டும்.   


4.    சுவர் விளம்பரங்கள்: கழகத்தின் சுவர் விளம்பரங்களில் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, புதுமைப்பெண் திட்டம்,  நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞர்  உரிமைத் தொகை ஆகிய திட்டங்களை  முன்னிலைப்படுத்தும் வகையில்  சுவர் விளம்பரங்களை எழுத வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் அனைத்து நிர்வாகிகளையும் வலியுறுத்த வேண்டும்.


5.    ஆட்டோ விளம்பரம்: உள்ளூரில் ஆட்டோ ஏற்பாடு செய்து குறைந்தபட்சம் 2 நாட்களுக்கு அனைத்துப் பகுதிகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, புதுமைப்பெண் திட்டம்,  நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், கலைஞர்  உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி கழக அரசின் சாதனைகளை பிரச்சாரம் செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.