×

உதயநிதி மீது எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கு

 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக, எடப்பாடி பழனிசாமி மான நஷ்ட ஈடு வழக்கு தொடுத்துள்ளார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலிருந்து தப்பிப்பதற்காக, சனாதனத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார் என கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடுகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொடநாடு வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக சனாதனத்தை ஆதரிப்பதாக என்னை விமர்சிப்பதா? என மனுவில் கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின்போது சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது நாடு முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேசம் , டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மக்கள் பிரச்சினையை திசைத் திருப்பவே உதயநிதி சனாதனம் குறித்து பேசியதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.