×

சேலம் அதிமுகவின் கோட்டை! இளைஞரணி மாநாட்டை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி

 

நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே மல்லிகுந்தத்தில் இன்று அதிமுக கொடியை ஏற்றிவைத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, “இரண்டு முறை தேதி குறித்தும் இளைஞர் அணி மாநாடு நடத்த முடியாமல் மூன்றாவது முறையாக திமுக இளைஞரணி மாநாட்டை நடத்துகின்றனர். அதற்கு காரணம் சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. அதில் யாரும் நுழைய முடியாது. நுழைந்தால் மக்கள் விரட்டியடிப்பார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மக்கள்தான் வாரிசு. அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவமும் மக்களுக்காக உழைத்தனர்.

அதிமுக நாட்டு மக்களுக்காக திட்டம் தந்தோம். திமுக தனது வீட்டு மக்களுக்காக திட்டம் தீட்டி அதில் கொள்ளையடிக்கின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால், இரண்டு ஆண்டு, 8 மாதம் ஆகிய நிலையில் மேட்டூர் அணை உபரி நீரில் 100 ஏரி நிரப்பும் திட்டத்தை திமுக கிடப்பில் போட்டுள்ளனர். ஆமை வேகத்தில் பணிகள்  நடக்கிறது. ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கவேண்டும் என்பதற்காக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தந்தோம். இதன் மூலம் 2,160 மாணவர்கள் மருத்துவம் படிக்கின்றனர். அவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றது. மாணவர்கள் விஞ்ஞான கல்வி பெற 42 லட்சம் மடிகணினி தந்தோம். அதனை திமுக முடக்கியது. திமுக அரசுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சரியான பதிலடி கொடுக்க வேண்டும்” என்றார்.