×

காவிரி நதிநீர் பிரச்சனையில் மீண்டும் மீண்டும் துரோகம் செய்யும் திமுக அரசு - ஈபிஎஸ் கண்டனம்

 

காவிரி ஆணையக் கூட்டத்தில் மேகதாது விவகாரத்தை நீர்வளக் கமிஷன் பார்வைக்கு எடுத்துச் செல்ல அனுமதித்த விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.  

இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காவிரி நதிநீர் தமிழ் நாட்டில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா உள்ளிட்ட பத்து மாவட்டங்களின் விவசாயத்திற்குப் பயன்படும் ஜீவாதாரமாக விளங்குகிறது. பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக, 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பைப் வழங்கியது. மத்திய அரசு, வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த காலம் தாழ்த்தியதால், 2018-ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களால், உச்சநீதிமன்ற ஆணையை செயல்படுத்த வலியுறுத்தி 22 நாட்கள் நாடாளுமன்றம் முடக்கப்பட்டு மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டது.

பல போராட்டங்களின் விளைவாக, 1.6.2018 அன்று மத்திய அரசு, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் நீர் முறைப்படுத்தும் குழு செயலாக்கத் திட்டத்தை மத்திய அரசிதழில் வெளியிட்டது. அதன்படி, காவிரி மேலாண்மை ஆணையம், அணைகளில் உள்ள நீரின் கொள்ளளவு, மழை அளவு, நான்கு மாநிலங்களின் தண்ணீர் தேவை போன்ற விஷயங்களை விவாதித்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு தண்ணீர் திறந்துவிடுவது என்பது குறித்து, நான்கு மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகளும், மத்திய அரசின் காவிரி மேலாண்மை அதிகாரிகளும் முடிவெடுப்பார்கள். எங்களது ஆட்சிக் காலத்தில் ஒருபோதும் மேகதாது அணை குறித்து ஆணையத்தில் விவாதிக்கவோ, அதுபற்றி விவாதப் பொருளில் கொண்டுவரவோ அனுமதித்ததில்லை. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-ஆவது கூட்டம் டெல்லியில் 1.2.2024 அன்று நடைபெற்றபோது, மேகதாது அணை விவகாரம், கூட்டத்தின் விவாதப் பொருளில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதுகுறித்துப் பேசவேண்டும் என்று கர்நாடக தரப்பு அதிகாரிகள் வலியுறுத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.