×

மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்து- சமைத்துக் கொண்டிருந்த மூதாட்டி உடல் கருகி பலி

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த போது  மின்கசிவு ஏற்பட்டதால் வீட்டில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 80 வயது மூதாட்டி லட்சுமி உடல் கருகி பலியானார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது  மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் தீ வேகமாக பரவியதால் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் சிலிண்டர் போன்றவை எரிந்து கொண்டிருந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர், நாகர்கோவில் தீயணைக்கும் படையினருக்கும் கோட்டார்  போலீசாருக்கும்  தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து  வீட்டில் பரவி இருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வீட்டினுள் இருந்த லட்சுமி என்னும் 80 வயது மூதாட்டி தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் சிலிண்டர் ஒன்றில் தீ பரவிய நிலையில்  சிலிண்டர் எரிந்து கொண்டிருந்த போது  உடனே அருகில் கிடந்த மணலை போட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் கோட்டார் போலீசாரும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவத்தால் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் தெரு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.