×

நேரம் காலம் பார்க்காமல் கடினமாக உழைக்கும் மோடிக்கு வாழ்த்துக்கள்- ஜி.கே.வாசன்

 

பா.ஜ.க கூட்டணி கட்சிகளின் எம்.பி க்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுத்தலைவராக திரு. நரேந்திர மோடி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வாழ்த்துக்குரியது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளின் எம்.பி க்கள் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழுத்தலைவராக திரு. நரேந்திர மோடி அவர்களை தேர்ந்தெடுத்திருப்பது பாராட்டுக்குரியது.தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக, நாடாளுமன்ற குழுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வாழ்த்துக்குரியது. திரு. மோடி அவர்கள் ஆற்றிய உரையில் அனைவருக்குமான ஆட்சி, தேச நலன், ஏழ்மையை விரட்டுவது, ஒரு மித்த கருத்து, கூட்டணி தர்மம், சிறந்த நிர்வாகம், தமிழக வாக்காளர்களுக்கு நன்றி போன்ற பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்ததால் தேசமே போற்றுகிறது.

எனவே ஜூன் 9, 2024 நாளைய மறு தினம் ஞாயிற்றுக்கிழமை பாரதப் பிரதமராக திரு. நரேந்திர மோடி அவர்கள் பொறுப்பேற்பதும் நாட்டு மக்கள் நலன் சார்ந்தது. நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும் அர்ப்பணித்து, நேரம் காலம் பார்க்காமல், கடின உழைப்பை மேற்கொண்டு வரும் திரு. மோடி அவர்களை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நான் சந்தித்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எனது முழு ஆதரவையும், அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.  நாடாளுமன்ற குழுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, பாரதப் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களையும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.