×

#Breaking மதிமுகவிற்கு பம்பரம் சின்னம்: தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கக்கோரி அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கு தலைமை நீதிபதி உள்ளிட்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

எங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது தேர்தல் ஆணையம். ஆனால் பம்பரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடைவதால், எங்களின் கோரிக்கையை உடனடியாக பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று வைகோ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

இதற்கு பதில் அளித்து தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் தனது வாதத்தில், அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும். மதிமுகவிற்கு சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக அந்தத் தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் எனவும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பம்பரம் சின்னம் பொது சின்னங்களின் பட்டியலில் உள்ளதா இல்லையா என்று பிற்பகல் விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு விட்டு வழக்கினை பிற்பகலுக்கு தள்ளி வைத்தனர்.

இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட  இவ்வழக்கில் மதிமுகவிற்கு பம்பர சின்னத்தை ஒதுக்குவது குறித்து நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.