×

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் ஊக்கத் தொகை - முதல்வருக்கு நன்றி 

 

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காக பல்வேறு மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள்  தமிழ்நாடு முதலமைச்சர்
திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (27.06.2024) தலைமைச் செயலகத்தில், 2024-25 ஆம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காக பல்வேறு மாவட்ட விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாய பெருமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்திடும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை, உழவர்களின் நலனை பேணும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை – உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம், வேளாண் பெருமக்களின் வருவாயினை பன்மடங்காக உயர்த்திட முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், விவசாயிகளுக்கு ஒன்றரை இலட்சத்திற்கும் மேலாக இலவச விவசாய மின் இணைப்புகள், வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.


விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், ரூபாய் 206 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருவதற்காகவும், இந்த ஆண்டு 12.06.2024 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட இயலாத சூழ்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவைத் தொகுப்பு திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருவதற்காகவும், 2024-2025 காரீப் கொள்முதல் பருவத்திற்கு (Kharif Marketing Season) சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து வழங்கப்படும் என்றும் அறிவித்தமைக்காகவும், காவேரி டெல்டா பாசன விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு தலைவர் திரு. கே.வி. இளங்கீரன், தஞ்சாவூர் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் திரு. கோவிந்தராஜ், மயிலாடுதுறை மாவட்ட காவேரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் திரு. கோபி கணேசன், திருச்சி - தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. விஸ்வநாதன், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் (தமிழக விவசாயிகள் சங்கம்) மாநிலத் தலைவர் திரு வேட்டவலம் கே. மணிகண்டன், விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநிலச் செயலாளர் திரு. அக்ரி கா. பசுமை வளவன், தஞ்சாவூர் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு. கண்ணன், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் திரு. பார்த்திபன், வாலாஜாபாத் வட்டாரம் உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் திரு. ஆறுமுகம், காஞ்சிபுரம் மாவட்டம் உழவர் நண்பர் திரு. சந்திரமோகன், இந்திய விவசாயிகள் சங்கத்தின் திரு. தனபதி, சேலம் ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. சங்கரய்யா, பொருளாளர் திரு. சரவணன், இந்திய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலச் செயலாளர் திரு. வாரணாசி இராஜேந்திரன், காவேரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. பாலு, காஞ்சிபுரம் மாவட்ட விவசாய சங்க அமைப்பாளர் திரு. ஞானப்பிரகாசம், செங்கல்பட்டு மாவட்டம் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. தனசேகரன் மற்றும் திரு. ஜீவகுமார், திரு. இராமுலு, திரு. வெங்கடாத்திரி உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் சந்தித்து, நன்றி தெரிவித்துக் கொண்டனர்.