×

நடிகை பூஜா பட் வாங்கிய நிலம் மீட்கப்பட்டதா? இல்லையா? அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

 

கல்லூரி வாசல் பட கதாநாயகி பூஜா பட் வாங்கிய பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை மீட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஜெகதாலா என்ற கிராமத்தில் கடந்த 1978ஆம் ஆண்டில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எம்.குப்பன் என்பவருக்கு ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, அதை வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் நிபந்தனை விதித்திருந்தார். இந்த நிலத்தில், 26.12 செண்ட் நிலத்தை, கல்லூரி வாசல் என்ற படத்தில் கதாநாகியாக நடித்த பூஜா பட் கடந்த 1999ஆம் ஆண்டு வாங்கியுள்ளார். பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை நடிகை பூஜா பட் வாங்கியது செல்லாது என்றும், அந்த நிலத்தை அரசுக்கு திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்றும் கோத்தகிரி வட்டாட்சியர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகை பூஜா பட் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கோத்தகிரி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகை பூஜா பட் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நிலத்தை மீட்டு விட்டதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிலம் இன்னும் பூஜா பட் வசம் தான் உள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து,  நிலத்தை மீட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என இரு தரப்பினருக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.