×

"கர்நாடக அரசின் செயல்பாட்டை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது முறையற்றது" - ஜி.கே.வாசன் 

 

கர்நாடக அரசு தமிழகத்துக்கான காவிரி நீரை திறந்து விடுவதில் முரண்படுவது கண்டிக்கத்தக்கது என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக அரசு தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்து விடுவதில் - காவிரி மேலாண்மை ஆணையம், உச்சநீதிமன்ற தீர்ப்பு, தமிழக உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் செயல்பட வேண்டும்.ஜூன் 24 வரை 7.236 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடவும், ஜூலை மாதத்திற்கு 31.24 டிஎம்சி தண்ணீரை திறந்து விடவும் காவிரி மேலாண்மை ஆணையத்தால் கர்நாடக அரசுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. ஆனால் ஜூன் மாதத்திற்கே இன்னும் 5.376 டிஎம்சி தண்ணீரை திறந்து விடாமல் காலம் தாழ்த்துகிறது கர்நாடக அரசு. இப்படி தமிழகத்திற்கான காவிரி நீரை உரிய காலத்தில் திறந்து விடாததால் தமிழக விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயிகளும், பொது மக்களும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசின் செயல்பாட்டை தமிழக அரசு எக்கோணத்தில் பார்க்கிறது என்று தெரியவில்லை.


தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துள்ள தி.மு.க, கர்நாடக காங்கிரஸ் அரசோடு பேசி காவிரி நீரை பெற முடியாததற்கு என்ன காரணம். கூட்டணி தர்மமா? கூட்டணி முக்கியம் என்றால் தமிழக டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரமான விவசாயம் என்னாவது. குறிப்பாக தமிழக அரசே அரசியலுக்காக, கூட்டணிக்காக ஆட்சி செய்வதை தாண்டி தமிழக விவசாயம், மக்களின் குடிநீர் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு செயல்பட முன்வர வேண்டும். தமிழகத்தில் மேட்டூர் அணை திறக்கப்படாமல் போதிய தண்ணீர் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடரக்கூடாது.

எனவே ஜூன், ஜூலை மாதத்திற்கு கர்நாடக காவிரியிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய நீரை காலத்தே தமிழக அரசு கர்நாடக அரசை வலியுறுத்தி பெற்றுத்தர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.