×

கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 63-ஆக அதிகரிப்பு 

 

கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருணாபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கருணாபுரம் கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் தமிழக அரசால் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கருணாபுரம் பகுதிக்கு நேரடியாக சென்று மெத்தனால் அருந்தி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். விஷச் சாராய விவகாரத்தில் இதுவரை 12 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில் கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராமநாதன் என்பவர் உயிரிழந்தார். தற்போதைய நிலவரப்படி, கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டோரில் 135 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்றுவருகின்றனர். கள்ளக்குறிச்சியில் 91, சேலத்தில் 30, விழுப்புரத்தில் 4, புதுச்சேரி ஜிப்மரில் 9 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஒருவர் என 135 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.