×

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் மாரியப்பன் தங்கவேலு

 

ஜப்பானின் கோபேயில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

மாரியப்பன் தங்கவேலுக்கு பாராட்டு தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜப்பான் நாட்டில் உள்ள கோபே நகரில்  நடைபெற்று வரும் 2024 'பாரா அத்லெட்டிக்ஸ்' தடகள விளையாட்டுப் போட்டிகளில் தடகளப் பிரிவில், இன்று (21.5.2024)  உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற தமிழ்நாடு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் திரு.மாரியப்பன் தங்கவேலு அவர்கள் கலந்து கொண்டு 1.88  மீட்டர் உயரம் தாண்டி மாபெரும் சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார் எனும் செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் மகத்தான  பெருமையைத் தேடித்தந்துள்ள திரு.மாரியப்பன் தங்கவேல் அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும்  பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்கிறேன். திரு.மாரியப்பன் தங்கவேல் அவர்கள் இந்த வெற்றியை ஈட்டுதற்காக மேற்கொண்ட கடுமையான பயிற்சிகளை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். இவர் வெற்றிக்குத் துணைபுரிந்துள்ள இவருடைய குடும்பத்தினர், பயிற்சியாளர் அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.