×


பட்டுப் புழு விதை உற்பத்தி மையம் அமைக்க பயனாளிகளுக்கு ரூ.1.81 கோடி மானியம் - அமைச்சர் வழங்கினார்

 

பட்டு வளர்ச்சி துறையின் மூலமாக 2 இளம் புழு வளர்ப்பு மையம், ஒரு பட்டுப் புழு விதை உற்பத்தி மையம் அமைக்க 3 பயனாளிகளுக்கு ரூ.1.81 கோடி மானியத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் வழங்கினார்.

மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ. அன்பரசன் அவர்கள் இன்று (11.3.2024) தலைமைச் செயலகத்தில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பட்டு வளர்ச்சி துறையின் மூலமாக 2 இளம் புழு வளர்ப்பு மையம், ஒரு பட்டுப் புழு விதை உற்பத்தி மையம் அமைக்க 3 பயனாளிகளுக்கு ரூ. 1.81 கோடி மானியம் வழங்கினார்கள். தமிழ்நாடு பட்டுவளர்ச்சித் துறையின் கீழ் செயல்பட்டுவரும் அரசு பட்டுமுட்டை உற்பத்தி நிலையத்தின் மூலமும் தரமான மற்றும் நோயற்ற பட்டு முட்டை உற்பத்தி செய்யப்பட்டு, பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பட்டு முட்டைத் தேவையினை கருத்தில் கொண்டும். தரமான பட்டு முட்டைத் தொகுதிகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு தடையின்றி வழங்கிடவும், தனியார் தொழில் முனைவோரை பட்டு முட்டைத் தொகுதிகள் உற்பத்தி செய்ய ஊக்குவிக்கும் வகையிலும், 2023-24 ஆம் ஆண்டின் பட்டுவளர்ச்சித் துறைக்கான அறிவிப்பில் "தனியார் தொழில்முனைவோர் மூலம் ரூபாய் 2 கோடியே 16 இலட்சம் மதிப்பீட்டில் ஒரு பட்டுப்புழு விதை உற்பத்தி மையம் (வித்தகம்) நிறுவப்படும் என மாண்புமிகு குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களால் அறிவிக்கப்பட்டது.


அரசு மற்றும் தனியார் வித்தகங்களிலிருந்து நோயற்ற பட்டுமுட்டைத் தொகுதிகளைப் பெற்று, பொரிப்பு செய்து, தட்பவெப்ப நிலைகளைப் பராமரித்து ஆரோக்கியமான சூழலில் இளம்புழுக்களை வளர்ப்பு செய்து பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்திடும் வகையில், இளம்புழு வளர்ப்பு மையங்கள் அமைத்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.A.கனகராஜ், மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த P.பூபதி, ஆகிய 2 பயனாளிகளுக்கும் தலா ரூ.9.75 இலட்சம் வீதம் மொத்தம் 19 இலட்சம் ரூபாய் உதவித்தொகைக்கான காசோலையை மாண்புமிகு அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. கடந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சி காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் மேம்பாட்டிற்கு 14 அரசு பட்டுப் பண்ணைகளில் ரூ.98 இலட்சம் மதிப்பில் 14 இளம்புழு வளர்ப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளது. ஆகமொத்தம் இது நாள் வரை ரூ. 1 கோடியே 7 இலட்சம் மதிப்பீட்டில் 16 இளம்புழு வளர்ப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை முதன்மைச் செயலாளர் திரு.தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப., மற்றும் பட்டு வளர்ச்சித் துறை இயக்குநர் திரு.சந்திர சேகர் சாகமுரி இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.