×

ஆவினில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ்- மனோ தங்கராஜ்

 

பால் கொள்முதல்  விலையை அதிகப்படுத்தும் நோக்கில் தரமான பாலை கண்டறிந்து  கொள்முதல் செய்ய பகுப்பாய்வு  இயந்திரங்கள் தமிழகம் முழுவதும் விரைவில் நிறுவனப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.

நெல்லை, தென்காசி கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆய்வு கூட்டம்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் கலந்துகொண்டு சிறப்பாக செயல்பட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை, மற்றும் கடன் உதவிகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “நெல்லை மற்றும் கன்னியாகுமரி பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் 2302 பேருக்கு 1 கோடியே 37 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆவினில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கும் தற்போது 10 சதவீத போனஸ் வழங்கப்பட்டுள்ளது.  அதனை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்  பத்து நாட்களுக்கு ஒரு முறை பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது.  தரமான பாலுக்கு 39 ரூபாய்  வரை கொள்முதல் விலை வழங்கப்படுகிறது.


சென்ற மாதம் முதல் ஆவின் பொருள்களுக்கு தமிழகத்தில் எங்கும் தட்டுப்பாடு இல்லை. மேலும் பால்  கொள்முதல் செய்யப்படும் இடத்திலேயே பாலின் தரம்  பகுப்பாய்வு செய்யப்பட்டு அதற்கு  ஏற்றாற்போல் விலை நிர்ணயம் செய்யும் திட்டம் தற்போது தமிழகத்தில் 50 சதவீதம் இடங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் இது  விரைவில் அமல்படுத்தப்படும். தற்போது ஆவினில் 20 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. புதிதாக பால் கூட்டுறவு சங்கங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

கடந்த இரண்டு மாதங்களில் 300 புதிய கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் முறைகேடாக பணியமர்த்தப்பட்டவர்கள் தொடர்பான விவகாரத்தில் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.