×

காலை உணவு திட்ட வெற்றியை பொறுத்திக்கொள்ள முடியாமல் தினமலர் செய்தி குசும்பு- அமைச்சர் ரகுபதி

 

மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள காலை உணவு திட்டத்தின் வெற்றியை பொறுத்து கொள்ளாமல் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

நாகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பு அணி நிர்வாகிகள்கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட கழகம், இளைஞர் அணி, மருத்துவ அணி, தொழிலாளர் அணி, மீனவர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது 2024 நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்து அமைச்சர் கட்சி நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்து ஆலோசனைகளை வழங்கினார். 

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி, “இந்தியா கூட்டணி அமைப்பதற்கு முன்பாகவே ஒன்றியத்தில் பாஜக அரசுநீக்கப்பட வேண்டும் என்று முழக்கம் எழுப்பியவர் முதல்வர் ஸ்டாலின். தற்போது இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டில் நினைத்ததை எல்லாம் செய்து கொண்டிருக்கும் ஒன்றிய அரசிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு  பாஜக அரசால் மாற்றப்பட்ட சட்டங்களின் பெயர்கள் மீண்டும் கொண்டுவரப்படும். 

தற்போதுள்ள சிறப்பான சட்டங்களை மாற்றக்கூடாது என அகில இந்திய அளவிலான வழக்கறிஞர்கள், மூத்த நீதியரசர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தினமலர் நாளிதழுக்கு குசும்பு செய்யவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அரசின் நல்ல திட்டங்களை விமர்சனம் செய்வதே அவர்களின் வாடிக்கையாகிவிட்டது. இதைப்பற்றி மக்கள் கண்டுகொள்ளமாட்டார்கள். சிறப்பான காலை உணவு திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காலை உணவு திட்டத்தின் வெற்றியை பொருத்துகொல்லாமல் தினமலர் நாளேடு செயல்படுகிறது” என்று கண்டனம் தெரிவித்தார்.