×

கர்நாடகாவில்  ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு வட மாநிலங்களிலும் அடுத்தடுத்து ஏற்படும்- அமைச்சர் சாமிநாதன்

 

கர்நாடகாவில்  ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு வட மாநிலங்களிலும் அடுத்தடுத்து ஏற்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

கோவை சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி  வைத்தார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரசு துறை சார்ந்த அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்ட அவர், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும்  வழங்கினார். 

தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் சாமிநாதன், “முதலமைச்சர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கர்நாடகாவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தான். அதை காங்கிரசும், பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்தனர். மற்ற மாநிலங்களுக்கும் வழி காட்டும் அரசாக திமுக அரசு உள்ளது. 

ஆட்சி பொறுப்பு ஏற்ற முதல் நாளில் கொரோனா நிதி உதவி, மகளிருக்கு பேருந்து பயணம், உள்ளிட்ட முக்கிய திட்டங்களை முதல் கையெழுத்தாக போட்டார் முதல்வர். கொரோனா நோய்த்தொற்று பாதித்தவர்களை மருத்துவமனைக்குள் நேரில் சென்று ஆய்வு செய்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். கடந்த திமுக ஆட்சி காலத்தில் அவினாசி சாலை,பெரியநாய்கன்பாளையம் உள்ளிட்ட சாலைகள் அகலப்படுத்தப்பட்டன. திமுக ஆட்சியில் திட்டமிட்ட காந்திபுரம் மேம்பாலம் அதிமுக ஆட்சியில் குறைபாடுடன் கட்டப்பட்டது

திமுகவின் திட்டங்கள் தான் கர்நாடக தேர்தலில் எதிரொலித்தது.  பாஜகவை காட்டிலும் காங்கிரஸ் அழுத்தமாக திட்டங்களை எடுத்துரைத்ததின் அடிப்படையில் வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் பாஜகவின் தோல்வி என்பது தென் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு. வட மாநிலங்களிலும் இந்த விழிப்புணர்வு அடுத்தடுத்து ஏற்படும். பாஜக மதரீதியான மூளை சலவையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. அதிலிருந்து கர்நாடக மக்கள் மத்தியில் தெளிவு ஏற்ப்பட்டுள்ளது. இது பிற மாநிலங்களில் தொடரும். பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்தவர்களுக்கு அவை படிப்படியாக வழங்கப்படும்” என உறுதியளித்தார்.