×

கிளாம்பாக்கத்தில் பிப்.1 முதல் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை

 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 1- ஆம் தேதி முதல் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் செயல்படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மாதம் பயன்பாட்டிற்கு வந்தது. இந்தநிலையில் இன்று முதல் செங்கல்பட்டு மற்றும் திண்டிவனம் வழியாக செல்லக்கூடிய அனைத்து தென் மாவட்ட பேருந்துகளும், கிளாம்பாக்கம் பகுதியில் இருந்து இயங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு 20 சதவீத பேருந்துகள், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 


கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 1- ஆம் தேதி முதல் மாதாந்திர சலுகை பயணச்சீட்டு விற்பனை மையம் செயல்படும் என்றும், பயணச்சீட்டுகள் மாதந்தோறும் 1-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கிஸ் தெரிவித்துள்ளார்.