×

மகளை தீ வைத்து கொலை செய்துவிட்டு தாயும் தீயிட்டு தற்கொலை

 

சிவகாசியில் மகளை தீ வைத்து கொலை செய்து, தாயும் தீயிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்த சாலமுத்து -முருகேஸ்வரி தம்பதியர் மகள் மருத வள்ளி( வயது 27) என்பவருக்கும், சிவகாசி அருகே  திருத்தங்கல் முத்துமாரியம்மன் காலனி 4வது தெருவில் வசிக்கும் முனியாண்டி-  வெள்ளைத்தாய் தம்பதியர் மகன் அக்னி வீரபுத்திரனுக்கும், கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1ம் வகுப்பு படிக்கும் யாழினி( வயது 6) என்ற மகள் உள்ளார்.

கட்டிடத்தொழிலாளியான அக்கினி வீரபத்திரனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. தனது உறவினரான அக்னிவீரபுத்திரனை திருமணம் முடித்திருந்த மருதவள்ளி தட்டி கேட்டதால் இது குறித்து கணவன்- மனைவி இருவருக்குமிடையே நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அருகில் உள்ள ஊறுகாய் கம்பெனியில் வேலைக்குச் சென்ற மருத வள்ளி, பள்ளியிலிருந்து தனது மகளை அழைத்து வீட்டுக்கு வந்து வீட்டை பூட்டி கொண்டார். பூட்டிய வீட்டுக்குள் தனது மகள் யாழினி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த மருத வள்ளி, தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 

தகவலறிந்த சிவகாசி கிழக்கு பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயும், மகளும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது யாரேனும் தீ வைத்து கொலை செய்தனரா? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.