×

செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்: வன்மையான கண்டனம் - ஜவாஹிருல்லா

 

செய்தியாளர் நேசபிரபுவிற்கு பாதுகாப்பு வழங்கத் தவறிய பல்லடம் காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவாஹிருல்லா  வலியுறுத்தியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், " நியூஸ் 7 தொலைக்காட்சியின் பல்லடம் செய்தியாளர் நேசபிரபு இன்று மர்மக் கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.  இக்கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்.

தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என அவர் முன்கூட்டியே காவல்துறைக்குத் தகவல் அளித்தும் காவல்துறையினர் அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்காதது கண்டனத்திற்குரியது.


நேசபிரபு ஒரு துடிப்பான செய்தியாளராகப் பணியாற்றியவர். அவரை கொலைவெறியுடன் தாக்கியவர்களை உடனடியாகக் கைது செய்து கடுமையான சட்டப்பிரிவுகளின் அடிப்படையில் தண்டிக்க வேண்டும் என்று கோருகிறேன். செய்தியாளர் நேசபிரபுவிற்கு பாதுகாப்பு வழங்கத் தவறிய பல்லடம் காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.