×

சாதிக்காக தனியாக ஒரு கோவிலை கட்டி, சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதா? - சீமான் கேள்வி

 

தென்முடியனூர் மாரியம்மன் கோவிலில் ஆதித்தொல்குடி மக்கள் வழிபாடு செய்ததால், தனியாக ஒரு கோவிலை கட்டி, சாதிய ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவதா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டை அடுத்த தென்முடியனூர் கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்குள் ஆதித்தொல்குடி மக்கள் சென்று வழிபட்டதால் அங்குள்ள ஒரு பிரிவினர்  தனியாகக் கோவில் கட்டத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.  அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் நிற்கும் தற்காலத்திலும், சாதியெனும் நோய்பிடித்து சகமனிதனை ஒதுக்கிப் புறந்தள்ளும் போக்குகள் தொடர்வது  கடும் கண்டனத்திற்குரியது. ஒரே மொழி பேசி, ஒரு தாய் வயிற்று மக்களாய் இரத்தமும் - சதையுமாக,  உயிரும் - உணர்வும்  கொண்டு நம்முடன் வாழும் சக மனிதர்களை ஒதுக்கி வைக்கும் இத்தீண்டாமைச்  செயல்பாடு துளியும் ஏற்புடையதல்ல.  எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய வழிபாட்டுத்தலங்களே சாதி எனும் சனாதனக்கட்டமைப்புக்கு இரையாகியிருப்பது மானுடம்  வெட்கித் தலைகுனிய வேண்டிய இழிநிலையாகும். 

தமிழ்நாடு அரசினுடைய  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் அக்கோவிலுக்குள் செல்லவே ஆதித்தொல்குடி மக்களுக்கு இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்பதுதான் சாதியொழித்து, சமத்துவம் வளர்த்த திராவிட கட்சிகளின் 57 ஆண்டுகால ஆட்சியின் சாதனையாகும். திராவிடத்தின் ஆட்சியில் சாதிய கொடுமைகள் தமிழ்நாட்டின் கடைக்கோடிவரைப் புரையோடியதோடு மட்டுமில்லாது, அவை பரிணாம வளர்ச்சியினைப் பெற்று, வெவ்வேறு வடிவங்களில் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டு, இன்றுவரை நிலைகொண்டிருப்பது திராவிட அரசியல் கோட்பாட்டின் படுதோல்வியையே காட்டுகிறது.