×

தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

 

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு படையினர் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடந்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த அப்துல் காதர் என்பவருடைய வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவருடைய மகனான அப்துல் ரஹ்மான்(25) என்பவர் நேற்று இரவு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அவருடைய உறவினர் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். அப்துல் ரஹ்மான் திருச்சியில் இருப்பதை அறிந்த என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள அப்துல் ரஹ்மான் உறவினர் வீட்டிற்கு வந்தனர். அங்கு வைத்து அப்துல் ரகுமானிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக அப்துல் ரஹ்மானை என்ஐஏ அதிகாரிகள் அவருடைய சொந்த ஊரான தஞ்சைக்கு அழைத்து சென்றனர். 

இதேபோல் தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் தக்ரீர் அமைப்போடு தொடர்பில் உள்ள தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே உள்ள மானாங்கரை கிராமத்தைச் சேர்ந்த ஷேக் அலாவுதீன் என்பவருக்கு வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். அய்யம்பேட்டை அருகே மானங்கரை கிராமத்தில் வசித்து வரும் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டில் இன்று காலை முதல் என்ஐஏ அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் காவல்துறையினர் என்ஐஏ அலுவலர்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு செட்டிபாளையத்தில் ஜேசிஸ் பள்ளி அருகே, அசோக்நகர் ஆறாவது வீதியில் உள்ள குடியிருப்பில் சர்புதீன் என்பவரின் வீட்டில் கேரளாவில் இருந்து வந்த ஐந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல், ஈரோடு பெரியார் நகரில் உள்ள முகமது இசாக் என்பவரின் வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடக்கிறது. இவர்கள் தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக சமூக வலைதளங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்கள் சேர்த்ததாக கூறப்படுகிறது.