×

விவேகானந்தர் பாறைக்குச் செல்ல மக்களுக்கு மீண்டும் அனுமதி

 

கன்னியாகுமரியில் கடல் நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி 45 மணி நேரத்திற்கு தியானத்தை மேற்கொள்கிறார்.  இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு நேற்று மாலை வந்த பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு நேற்று மாலை வருகை புரிந்தார்.  

இதை தொடர்ந்து மாலை 5:40 மணியளவில் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார்.  அங்கு சாமி தரிசனம் மேற்கொண்ட அவர் மாலை 6 மணிக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் விவேகானந்தர் என்ற படகில் பயணித்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு சென்றார். இரவு 7 மணிக்கு அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து தியானத்தை பிரதமர் மோடி தொடங்கினார் .  5 மணி நேரம் தியானம் அதன் பிறகு சிறிது ஓய்வு என மேற்கொண்ட பிரதமர் மோடி நாளை மாலைவரை  45 மணி நேரத்திற்கு தொடர் தியானத்தை மேற்கொள்ளயிருக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டுள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு மீண்டும் பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறைக்கு மக்கள் தங்கள் செல்போன், உடைமைகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.