×

"பொன்முடி, அவரது மனைவி சரணடைவதில் இருந்து மார்ச் 4 வரை விலக்கு தொடரும்" - உச்ச நீதிமன்றம்

 

பொன்முடி வழக்கில் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவர் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு சிறை தண்டனை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை இடைக்காலமாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  பொன்முடி மேல்முறையீட்டு மனு மீது மார்ச் 4-ம் தேதிக்குள் பதிலளிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நான்கு வாரங்கள் வரை பொன்முடி சரணடைவதில் இருந்து விலக்கு தொடரும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.