×

அரசு மருத்துவமனையில் 5 மணிநேரம் மின்தடை! நோயாளிகள் அவதி

 

அந்தியூர் அரசு மருத்துவமனையில்  சுமார் ஐந்து மணி நேரம் ஏற்பட்ட மின்தடையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அந்தியூர் தாலுகாவின் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் உள் நோயாளிகள் பிரிவு, சித்த மருத்துவ பிரிவு, சமையல் கூடம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் மின் சர்க்யூட்டில் ஏற்பட்ட பழுதின் காரணமாக மின் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். தொடர்ந்து சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு எலக்ட்ரீசியன் வரவழைக்கப்பட்டு பழுது சரி செய்யப்பட்டதை அடுத்து மின்சாரம் வழங்கப்பட்டது. கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வரும் நிலையில் அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடை ஏற்பட்டதன் காரணமாக நோயாளிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இது போன்ற தவறுகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.