×

விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்- மு.க.ஸ்டாலின்

 

சென்னை திருவான்மியூரில் சாலை விபத்தில் உயிரிழந்த தூய்மைப் பணியாளர் சிவகாமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை துரைபாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த தூய்மை பணியாளரான சிவகாமி( 37 )இன்று அதிகாலை திருவான்மியூர் RTO அலுவலகம் அருகே, ECR பிராதான சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மாவிலி வாக்கம் திருவள்ளுவர் நகரை சார்ந்த அஸ்வந்த், தனது காரில் வரும்பொழுது சாலையில் வேலை செய்து கொண்டிருந்த துப்புரவு தொழிலாளி சிவகாமியை, இடித்ததால் சிவகாமி நிலை தடுமாறி எதிரே உள்ள சாலையில் விழுந்துள்ளர். இதையடுத்து எதிர் சாலையில் வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத லாரி சிவகாமியின் தலையில் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் லாரியுடன் தப்பி சென்றுவிட்டார்.

இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இன்று அதிகாலை சென்னை, திருவான்மியூர்‌ அடையாறு மண்டலம்‌ வட்டாரப்‌ போக்குவரத்து அலுவலகம்‌ அருகில்‌ நிகழ்ந்த சாலை விபத்தில்‌ சென்னை பெருநகர மாநகராட்சியில்‌ தூய்மைப்‌ பணியாளராகப்‌ பணியாற்றி வந்த திருமதி. சிவகாமி (வயது 42) கெ. திரு.வெங்கடேசன்‌ என்பவர்‌ பணியிலிருந்தபோது அவர்‌ மீது வாகனம்‌ மோதியதால்‌ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்‌ என்ற துயரமான செய்தியைக்‌ கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்‌.  ஒக்கியம்‌ துரைப்பாக்கத்திலுள்ள கண்ணகி நகரில்‌ தன்‌ கணவர்‌, மகள்‌ மற்றும்‌ மகனுடன்‌ வசித்து வந்த திருமதி. சிவகாமி அவர்கள்‌ இந்த சாலை விபத்தில்‌ உயிரிழந்தது நமக்கெல்லாம்‌ பெரும்‌ வேதனை அளிக்கின்றது. அவரது குடும்பத்தினருக்கு என்‌ ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தையும்‌ தெரிவித்துக்‌ கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய்‌ ஐந்து இலட்சம்‌ வழங்கிடவும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.